Wednesday, December 24, 2008

இது என்னவென்று உனக்கு தெரியுமா?

சற்றே செறுக்குடனே!  
சமயமும், கலையும் , 
இலக்கியமும், சங்க கால கதைகளும், 
அறிவியலும், புனைவுகளும், 
இயற்கையின் விதிகளையும், 
இன்னும் பலவும்,  

புவியியல் விதி இது, பூளோக பொருள் இது, 
என எங்கே எப்போதோ படித்து 
செரிமாணம் முடியாத தகவலை, 
வரிவரியாய் சொன்னாலும்,  

மாறாத புன்னகையில், 
மறுப்பேதும் சொல்லாமல், 
விருப்போடு கேட்பாயே!  

செறுக்கை கொல்ல
இந்த வழியை எங்கிருந்து நீ அறிந்தாய்?

நெஞ்சுக்கு நீ... தீ...

உலகின் மொழியில் எல்லாம் 
உச்சரிக்க முடியாதது
எனக்கு பரிச்சயமானது..... 
மௌனம்....  

ஓராயிரம் எண்ணங்கள் உளத்தில் எழுந்தாலும், 
மூளைகளின் நரம்பு துடிப்பு உடலில் உணர்ந்தாலும், 
இதயத்தின் இயக்க வேகம், இயல்பை விட அதிர்ந்தாலும், 
வெளிவரும் மூச்சில், வெப்பம் இயைந்தே போனாலும்.....  

பழகிய தாய்மொழியில் வார்த்தைக்கு பஞ்சமில்லை. 
உணர்வுகள் மோதுகையில், உதடுகளுக்கு ஒலியில்லை... 
காதல் என்றுதான் இல்லை, கோபம், வெறுமை, இனிமை,  
என பல நிலைகளிலும் நான் ஊமையாகி போகிறேன்...  

ஆனால், நீ.... 
நான் மௌனத்தில் இருந்தாலும், 
என் மனதின் சலனம் எல்லாம், எப்படி அறிந்தாய்?  

என் மன நிலைக்கு ஏற்ப,  
புன்னகைக்கவோ, பரிகாசிக்கவோ, 
பக்கத்தில் அமர்ந்து, கரம் பிடித்து தேற்றவோ, 
துக்கம் ஏற்பட்டால் தூர துரத்தவோ, எப்படி நீ அறிந்தாய்?.  

மௌனத்தில் அமைதியில்லை என, 
மௌனமாய் கற்றுத்தந்தாய்... 
இயல்பின் நான் திரும்பும்போது.. நீ 
இங்கில்லை... எங்கே சென்றாய்?

Tuesday, December 23, 2008

எங்க ஏரியா! உள்ள வரியா!

சென்ற வாரத்தில் கொங்கு நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என ஊர் பெருமையை அழகாக உரைக்கும் பதிவுகளை படிக்க நேர்ந்தது..... .நம்ம சென்னையை பற்றி எந்த பதிவும் கண்ணில் படவில்லை.... பிறந்து, வளர்ந்து, சிரித்து, மகிழ்ந்த ஊரான சென்னையை பற்றி சிலாகிக்கவே இந்த மொக்கைஸ்

நீங்கள் கேட்ட பாடல் ரேஞ்சில் வாரம் ஒரு ஏரியா கவர் பண்ணலாம்னு ஐடியா... . 52 வாரம் ஈசியா ஓட்டிடலாம்லே! பதிவு போட இனிமேலும் மண்டைய குடைய வேண்டாம்....

தொடங்கும் முன் ஒரு டிஸ்கி ;) நிறைய தகவலுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் விக்கிபீடியா மற்றும் பிற இணையங்களின் உதவியும் கூகில் ஆண்டவர் அளிக்க பெற்று இந்த பதிவை சுட்டளிக்கிறேன் ;)




இணையத்தில் பழைய சென்னையின் அழகான புகைபடங்கள் நிறைய இருக்கிறது... காப்பிரைட் பயத்தின் காரணமாக... உங்கள் பார்வைக்கு... இந்த லிங்கை க்ளிக்கவும்...





“எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!”

ஔவையார் பாடியது என நினைக்கிறேன்... இன்றளவும் எந்த ஊருக்கும் பொருந்தும்.

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள், ஒழுக்கமின்மை, இலஞ்சம், சாலை விதிகள் மீறல், சுகாதாரமின்மை, மக்கள் தொகை நெருக்கம், மாசு, தூசு, என குறைகள் எத்தனை இருந்தாலும், பல கோடி மக்களுக்கு வாழ்வின் ஆதாரமாக விளங்கி, ஒவ்வொரு நாளும் வளர்ச்சி பெரும், வாழ்வின் விளக்கமாக சென்னை தோற்றமளிக்கிறது...

இழுவை முடிந்தது.. இனி பதிவிற்கு....

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணிப்போம்.... தொழிற்சாலையின் புகையிலும், ஏழ்மையின் தோற்றத்திலுமே சித்தரிக்கப்படும் வட சென்னை.... வளமான பகுதிகளையும் தன்னிடத்தே கொண்டது.... இங்கு வர்த்தக தொழிற்சாலைகளின் தண்டையார்பேட்டையில் இருந்து, வடக்கில் எண்ணூர் தாண்டி வளர்ந்து கொண்டே வருகிறது...... தியாகராய நகருக்கு அடுத்த படியாக ஜவுளி வாணிகம் நிகழும் வண்ணாரப்பேட்டை... மீன்பிடி துறைமுகம் இருக்கும் காசிநகர் (காசிமேடு)... சரித்திர சுவடுகளை தாங்கி இன்று மங்கி இருக்கும் இராயபுரம்... இரயில் தயாரிக்கும் பெரம்பூர், மற்றும் வளரும் சுற்றுப்புறத்தில், வில்லிவாக்கம் , கொரட்டூர், அண்ணா நகர் ஆகியவற்றை உள்ளடக்கியது....

உயர்நீதி மன்ற வளாகம் தாண்டி, வட சென்னை வர பயப்படும் நண்பர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன்.... இங்கு மட்டுமே... ஐந்து அடி அகல தெருவில், ஐந்து அடுக்கு மாடிகள் இருக்கும்... இங்கு மட்டுமே ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு சிறு தொழில் நடக்கும்.... மாவு அரைத்து விற்பதானாலும், மளிகை பொருட்களை மீண்டும் பாக்கிங் செய்து சில்லரை விற்பனை செய்வதோ.... சாலைக்கு சாலை இருக்கும் பருப்பு ஆலைகளோ, சில்லரை வணிகமோ, இந்த மக்களிடம் வளம் சிறக்க வாழும் ஒரு முனைப்பை வெளிப்படுத்தும்.... ஓரளவில் ரவுடியிசம் மற்றும் கட்ட பஞ்சாயத்து உண்டென்றாலும், சென்னையின் எல்லா இடங்களை போலத்தான் இங்கும்... ஆக தலைப்புக்கு விளக்கம் சொல்லியாச்சு...

சமயம், இலக்கியம், சிவப்பு கொடி, அரசியல், , அடி தடி என சினிமா படம் போல எல்லாம் கலந்து இயங்கும் வாழ்க்கை... இரவு 2 மணிக்கு வெளியே சென்றாலும், சாலையில் மக்கள் நடமாட்டம்... காலை 3 மணிக்கெல்லாம் தேனீர் கடையில் கூட்டம்.... என வித்தியாசமான வாழ்க்கை.....

என் நினைவில் 90 களில் நிறைய கவிதை வட்டம், தமிழ் பேரவை கூட்டங்களில் கலந்த நினைவு.... மார்கழி மாதத்தில் எல்லா சபாக்களிலும் 50/100/500 ரூபாய் டிக்கட் என்றால், வட சென்னையில் மட்டும் இலவச இசை நிகழ்ச்சிகள்.... இராசா அண்ணாமலை மன்றமானாலும், கலைஞர்களும் பொதுமக்களோடு அமர்ந்து இசைக்கும் திருஅரங்கப்பெருமாள் கோவில் நிகழ்ச்சியாகட்டும்... இலவசமென்றாலும், இசைக்கும் பஞ்சமில்லை...

சமயம்; வடசென்னையின் திருவொற்றியூர் கோயில் தனிசிறப்பு, திருவொற்றியூரிலேயே வள்ளலார் வளாகம், பட்டினத்தார் ஜீவசமாதி அடைந்த இடம், கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், மின்ட் அருகில் உள்ள திரு ஏகாம்பரேசுவரர் கோவில், மன்னடி அருகில் இருக்கும் மல்லிகேசுவரர் கோவில், காளிகாம்பாள் கோயில், சென்ன மல்லீசுவரர் கோவில், கந்தகோட்டம் சுப்ரமண்ய சுவாமி கோயில், கச்சலீசுவரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காலத்தீசுவரர் கோவில் என இந்து சமயம் இங்கு இழையோடுகிறது...

மன்னடி மற்றும் முத்தையால்பேட்டை பகுதியில் பழைய கட்டிடங்கள் பலவும் காணலாம்... சென்னையின் முதல் வணிக பொருளாதார வளாகமாக திகழ்ந்த இடம், இன்றும் பல கோடி ரூபாய்களை பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கிறது....

இராயபுரம் பகுதியில் கிருத்தவ கோயிலான மாதா கோவில் பழமையானது... அதே போன்று, ப்ராட்வே பகுதியில் பல புராதன சர்ச்சுகளும், மசூதிகளும் உண்டு.... மத வேறுபாடு, மத கலவரங்கள் இங்கு அரிது.... அடுத்த வீட்டு நபரின் பெயர் தெரியாத நபர்களின் எண்ணிக்கை வட சென்னையில் மிக குறைவு... ;)

பக்கிங்காம் கால்வாய் என ஒரு காலத்தில் படகு போக்குவரத்திற்கு உதவிய கால்வாயும், கூவத்தின் ஒரு பகுதியும் வட சென்னையில் பாய்கிறது... நம்பிக்கை இருக்கிறது... சில வருடங்களில் மீண்டும் இந்த ஆறுகள் புது உயிர் பெறும் என நம்பிக்கை உள்ளது....

சென்னை கோட்டையில் உள்ள புனித சர்ச்சும், அருங்காட்சியகமும் பார்க்க வேண்டியவை.. ஒரு நகரத்தின் வரலாற்றை தன்னுள்ளே புதைத்து வைத்துள்ள கோட்டை அருங்காட்சியகம் பலராலும் அறியப்படாமலே இருக்கிறது...

வளம் மிகச்சிறந்து, மக்கள் தொகை நெருக்கத்தால் பொலிவிழந்த வடசென்னை... இப்போது அடுத்த கட்டத்தில் உள்ளது.... பழைய ஆலைகளும், குடோன்களும் இப்போது தங்களிடத்தில் இருக்கும் நிலத்தின் அருமையை உணர்ந்து, குடியிருப்பு பகுதிகளாக மாறி கொண்டு வருகிறது.... பின்னர் வளர்ச்சி அடைந்த இடங்களான பெரம்பூர் முதல் கொரட்டுர் வரையிலான பகுதி ஓரளவிற்கு முறையான வளர்ச்சியின் அடிப்படையில் உள்ளது... எதிர்வரும் ஆண்டுகளில் வடசென்னை மீண்டும் முழு வளம் அடையும் என நம்பிக்கை உண்டு....

நிறைய எழுத நினைத்து, நிறைவில்லாமல் எழுதிவிட்டேன்... மீண்டும் அடுத்த வாரம் மத்திய சென்னையை பார்வையிடலாம்... பின்னூட்ட சூறாவளிகளே... சென்னையின் நினைவில் கும்மி தொடர அழைக்கிறேன்...

Wednesday, November 26, 2008

சுவையார்வம்!

என்னையும் ஒரு இணைய எலக்கியவாதியா நினைச்சு தொடர் விளையாட்டுக்கெல்லாம் அன்போட கூப்ட விக்கி அண்ணாச்சிக்கு (விக்கி... நான் அப்படியெல்லாம் நினைக்கலன்னு பின்னூட்டத்துல போடாதீங்க) நன்றி....


1)முதன் முதலில் எப்போது பத்திரிக்கையை(நாளிகை) படிக்க தொடங்கினீர்கள்?

நினைவில் இருப்பது, அம்புலிமாமா, கோகுலம் மற்றும் Twinkle தான்... ஆரம்ப பள்ளி காலங்களில் இருந்தே (4 அல்லது 5ஆவது வகுப்பு முதல்) சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்தில் விடுமுறை நாட்கள் செலவிடப்படும். அங்கு சில ஆண்டுகள் சிறுவர் நூலகத்திலும், பல ஆண்டுகள் சிறுகதை, நாவல், நவீனம் பகுதியிலும் முழு நாளையும் செலவாக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டேன் ;)) ... என்னுடைய தந்தையார் அதே கட்டிடத்தில் மேல் தளத்தில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய ஒன்றுதான் காரணம்... பின்னாளில் அதே அலுவலகத்தின் பின்னால் இருக்கும் British Council Library கொஞ்சம் படிக்க வைத்தது
ஆனால் இன்றைக்கும் கூட, நக்கீரன் அல்லது குமுதம் படிப்பதை விட கோகுலம் படித்தால் நலன் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...

2)அறிமுகமான முதல் புத்தகம்

திருக்குறளும், திருவாசகமும், வீட்டில் கட்டாய பாடமாக்கப்பட்டது... அவைதான், குறிப்பாக திருக்குறள்தான் முதல் அறிமுகம் என நினைக்கிறேன்….. அதை தவிர்த்து முதலில் புரிந்து, உணர்ந்து அனுபவித்த புத்தகமாக நினைவில் இருப்பது, “புலவர் மகன்”, பூவண்ணன் எழுதியது என நினைக்கிறேன்.. அதே போல அறிவியல் புனைவு கதைகளாக மிட்டாய் பாப்பா.... முதல் துவங்கி முல்லா கதைகள், பீர்பால், புத்த ஜாதக கதைகள், மரியாதை இராமன், சிறுவர் கதைகள் என ரொம்ப காலத்துக்கு ச்ச்சின்ன புள்ள தனமாவே என்னுடைய புத்தக ஆர்வம் இருந்தது (கல்லூரி காலத்தில் கூட கோகுலம் படிப்பேன் ... ;))

நியூ சென்சுரி புக் ஹவுஸ் என சாலையெங்கும் புத்தக கடைகளை பார்த்த காலமும் உண்டு... ருஷ்ய மொழியாக்கள் நிறைய படிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தது... தி மாபின் சிபிரியாக் தன் மகளுக்கு சொன்ன கதைகள் என்னும் சிறுகதை தொகுப்பு இன்னும் மனதில் உள்ளது...

கோகுலம், அம்புலிமாமா, சிறுவர் மலர், Twinkle, கல்கண்டு, மஞ்சரி, கல்கி, குமுதம், விகடன், ஜூ.வி. வார மலர், வள்ளுவர் வழி, முகம், சித்தாந்தம், இராம கிருஷ்ண விஜயம், Divine Life, இந்தியா டுடே, competition success review, Sputnik, Readers digest, National geographic collection, என வேறுபாடே இல்லாமல் அனைத்தையும் ஆர்வத்துடன் நுனிப்புல் மேய்வேன்...

கொஞ்சமாக தமிழ் இலக்கியங்கள் (சிலப்பதிகாரமும், மணிமேகலையும், திருமுருகாற்றுப்படையும், கம்பராமாயணமும் ஸ்பெஷல்)... மற்றும் மு.வ எழுதிய புத்தகங்கள், விவேகானந்தரின் தொகுப்பாகிய ஞான தீபம், கண்ணதாசன் அவர்களின் புத்தகங்கள், என நிறைய மேய்ந்திருக்கிறேன்... வீட்டில் அன்னை நூலகம் என என்னுடைய தந்தையார் ஒரு மினி-புத்தக நிலையத்தை வைத்து, படிப்பதை ஊக்கப்படுத்தியதாலேயே... இத்தனை அறிமுகங்களும் கிடைத்தது...


3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?
பள்ளியில் தமிழ் பாடங்களை உரக்க படிக்கும் வேலை அவ்வப்போது எனக்கு அளிக்கப்படும்... புத்தகத்தை தலைகீழாக வைத்து படிப்போம். (ஃபிலிம் காட்டுறதுதான்...) தமிழ் ஆசிரியர் புன்னகைப்பார்.. ஆனால் திட்டியதில்லை.... பி.கு கல்லூரியில் வகுப்பில் தூங்கி மாட்டியதும், எம்.பி.ஏ Operations Research வகுப்பில் டிக் டேக் டோ விலையாடி மாட்டியதும் என்னுடைய சரித்திரத்தில் சாகச கோடுகள்.. ;)
ரொம்ப்பப்பப பயந்த சுபாவம்ங்கோ...

4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?
படிக்கும் பழக்கம் இருந்தது... க.பி படிப்பெல்லாம் மூட்டை கட்டி வெச்சாச்சு...
பி.கு... எங்க வீட்டு தங்கமணி என்னோட ப்ளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க ;))

Tuesday, November 18, 2008

விட்றா விட்றா... சூ னா பா னா

மதிப்பிற்குரிய தமிழா!
தமிழினத்தில் பிறந்த தவறாலேயே
தவறாமல் நீ ஏசப்படுகிறாய்,

இங்கு மட்டுமே, ஜாதி எதிர்ப்பாளர்கள்,
ஜாதியை பேசி பழிதீர்ப்பார்கள்,
நீ எந்த குலத்தை சேர்ந்தவனானாலும்
ஏசப்படுவது உறுதி

இங்கு மட்டுமே, ஐ. டி துறையா அறிவிலி என
செய்யும் தொழிலால் கூட வேற்றுமை பார்ப்பார்கள்
நீ எந்த தொழில் செய்துவந்தாலும்,
இகழப்படுவது உறுதி

அறிவியல் ஆகினும், ஆன்மீகம் ஆயினும்,
புரிதல் இன்றியே பிதற்றி பழிப்பார்கள்,
நீ ஆன்மீகத்தில் இருந்தாலும், அன்பு நிலையில் இருந்தாலும்,
மனிதபண்புகளை மட்டும் மதிக்க கற்றிருந்தாலும்
பழிக்க ஒரு கூட்டம் வழி மீது காத்திருக்கும்

சமூகத்தில் சிரித்து பழகுவாயா? சிந்தனையில் உணர்ந்திடுவாயா?
பொறுப்பற்றவன் என்றோ, பைத்தியம் என்றோ,
சந்தி முனையில் ஒரு கூட்டம் கட்டாயம் கருத்துரைக்கும்

ஆண் பெண்ணிடமோ, பெண் ஒருத்தி ஆணிடமோ,
அதை தவிற வேறோன்றும் செய்ய முடியாது,
என அறுதியிட்டு அறிந்து வைத்துள்ள ஒரு சமூகம்.
திரையில் காதல் என்றால், திகட்ட விசிலடித்து,
நண்பன் நட்பை கூட கொச்சையாய் பேசிடும்.

இங்கு சமூக வாழ்க்கை என்பது,
அடுத்தவர் பற்றிய கருத்துக்கள்,
தனி நபர் கருத்து சுதந்திரம் என்பது,
நாகாரீகம் தாண்டிய உரிமை

ஊடகங்கள் ஒவ்வொன்றிலும்,
உதவாத தகவல்கள்,
இன்னும் நிறைய...
எனக்கும் குறை காண்பது எளிதாகவே உள்ளது

எல்லா சமூகத்திலும் நன்றும் தீமையும்,
எப்போதும் கலந்திருக்கும் இது நீதி என்றாலும்,

ஈழத்தில் படுகொலையா... முதுகெலும்பில்லாத தமிழா
சட்ட கல்லூரி தாக்குதலா.... அறிவில்லாத தமிழா...
மின்சார வெட்டா... மூளையில்லாத தமிழா..
அடுத்த ஆட்சிக்கு யார் வந்தாலும்,... ஆண்மையில்லாத தமிழா

வசவுகளை கேட்பது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கான தீர்வு என்னிடம் இல்லை...
ஆனால் நம்பிக்கை உள்ளது,
பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து,
இது பழகிபோய்விடும் என்று...

Friday, October 31, 2008

ஹாலோவீன்

இன்று ஹாலோவீன்.......

இயந்திர மனிதனாகவும்,
கடல் கொள்ளயனை போலவும்,
பேய்களை போலவும்,
பறவைகள் போலவும்,

பலவகை ஆடை உடுத்தி,
அலுவலகம் முழுவதும் புன்னகை வெள்ளம்....

ரீட் இச்சிக்கி (எனது அலுவலக நண்பர்)
ஒட்டு மீசை ஒட்டி,
பயங்கரமாய் இருக்கிறதா என சிரிக்க.....

இயல்பான என் கட்டை மீசை,
உனக்கென்னடா கெட் அப்பே வேண்டாம்
என நகைக்கிறது...

Sunday, October 26, 2008

டப்பாசா பட்டாசா?

அங்கே தீபாவளி... இங்கே ஞாயிற்றுகிழமை...Laundry, Housekeeping எல்லாம் முடிச்சாச்சு...கொசுவத்தி மேட்டரே கன்ட்ரோல் பண்ணவே முடில..... எவ்வளவு நேரம்தான் நானும் கொசுவத்தி சுத்தமுடியும்.. அதுதான் கிறுக்கி தள்ளிடுவோம்னு ;)

காலை 4 மணிக்கெல்லாம் அப்பா எழுப்பி விடுவார்... முதலில் யார் பட்டாசு கொளுத்துவது என்ற ஒரு குஷி... நமக்கு முன்னாடி யாராவது கட்டாயம் எழுந்து ஒரு லக்ஷ்மி வெடியோ அல்லது ஒரு பாமையோ வெடித்து வெறுப்பேற்றுவான்... நாங்களும் எழுந்தவுடன், நமக்கு தரப்பட்டுள்ள மிளகாய் பட்டாசு இரண்டை, பூஜை அறையில் இருக்கும் ஊதுவத்தியை வைத்து கொளுத்தி நாங்களும் வெடிச்சோம்ல என அறிவிப்போம்.

அடுத்து எண்ணைக்குளியல் ;) வீட்டிலேயே Boiler ஒன்று இருக்கும்...தேங்காய் ஓடு, தென்னை நார், காய்ந்த விறகுகள் எல்லாம் சேர்ந்த ஒரு Fire Tube Boiler (fire inside the tube surrounded by water) அதற்குள்ளே கொஞ்சம் உப்பை போடுவது, தேங்காய் ஓடு எரியும் போது கேட்கும் உஸ் சத்தம் இதிலேயே ஒரு மணி நேரம் ஊறி விடுவோம்... சீயக்காய், புங்கங்கொட்டை எல்லாம் சேர்த்து அரைக்கப்பட்டு (நிஜமா... மீரா ஹெர்பல் எல்லாம் இல்லை) அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து தலையில் தேய் தேய் என தேய்ப்பார்கள்... யப்பா .. இந்த எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கத்தை வெறுப்பதன் ஒரே காரணம் இந்த ஒரு மேட்டர்தான்... தலைமுடியெல்லாம் வலிக்கும்... விடமாட்டாங்க.. ;) அது முடிந்ததும் ஒரு குட்டி வழிபாடு... சாப்பாடு.. அப்புறம் டைம் ஓடிடும்...

அப்போது வீட்டில் பொட்டி (கம்யூட்டர் இல்லங்க.. டி.வி. கூட) இருந்ததாக நினைவில்லை. தீபாவளி அன்று பேரளவில் சில பட்டாசு வகைகள் கிடைக்கும்... சில சுறுசுறுவத்திகளை சுற்றி சுற்றி பற்றவைத்தும், மிளகாய் பட்டாசை கொளுத்திப்போட்டும் தீபாவளி ஓடிப்போய்விடும்..

அன்றைய மாலையில், புதுப்பானையில் பாகு வெல்லம் காய்ச்சி, அதிரசம், அது மட்டுமல்லாமல், முறுக்கு, பணியாரம், அப்பம் அனைத்திற்கான foundation வேலைகளும் நடக்கும்.

அந்த அதிரசம் தட்டும் வேலை இருக்கிறதே... யப்பா... நினைவிருக்கும் கடந்த ஆண்டுகளில், முதலில் தட்டும் போது கொஞ்சம் சுலபமாக இருக்கும்.. போக போக கட்டியாகிவிடும். விரல் வலிக்கும்... அதில் தண்ணிர் அல்லது எண்ணை சேர்த்தால் பிரிந்துவிடுமாம்.. . முதலில் நான்கைந்து பேர்கள் சேர்ந்து தட்ட துவங்குவார்கள்... கடைசியில் பார்த்தால், பெரும்பாலும் 2 அல்லது 3 பேர் இருந்தால் அதிகம்.. .

இரண்டு அண்டா (அதாவது பெரிய பாத்திரம்) சில பல தூக்குகளை (அது மீடியம் சைஸ் பாத்திரம் ... தொங்க ஏதுவாக ஒரு பெரிய Handle இருக்கும்) அனைத்தையும் இந்த பலகாரங்களை கொண்டு நிறைத்த பின்னர் ஒரு 10 அல்லது 11 மணி அளவில் தூக்கம்....

பூவிருந்தவல்லி (அதாங்க பூந்தமல்லி) தாத்தா வீட்டில் இருந்த வரை... தீபாவளி விட நோன்பு பண்டிகைதான் சிறப்பு... ஒரு காலத்தில் பண்டிகையின் போது ஒன்றாக சேரும் குடும்பத்தினர் எண்ணிக்கை ... நூறு பேர் வரை போனதாக நினைவுண்டு..... காலை ஒவ்வொருவரா வரத்தொடங்க... சமையல் கட்டில் அம்மா தலைமையில், வடை குழம்பு, மோர் குழம்பு, உருளைகிழங்கு பொரியல் உட்பட்ட பல சாப்பாட்டு ஐட்டங்கள் அமைதியாக தயாராகும்

அத்தனை பேருக்கும் சிற்றுண்டி முடிந்தவுடன், சேர்ந்து வழிபாடு நடக்கும். எப்போதும் போல அப்பாவும், பெரியத்தையும், புதுபுது பதிகமாக பாடி வழிபாட்டை பெரிதாக்க, சிறியவர்கள் எல்லாம் எப்போது வழிபாடு முடியும் என மானசீகமாக வேண்டி வழிபாடு முடியும்போது கடவுள் கருணை காட்டிய பெருமையை எண்ணி, பூரிப்போம்.

அது முடிந்தவுடன் சாப்பாட்டு பந்தி, பந்திக்காகவே ஓலைப்பாய்கள் சில இருக்கும். அது போதாதென்று, Bed Spread சிலவற்றை மடித்து, விருந்தினர் அமர, சாப்பாட்டு விழா தொடங்கும். ஸ்பெஷல் ஐடங்களான குழம்பு வடை, தயிர் வடை, அப்பம் பரிமாறுவது குஜால்ஸ்...

உறவினர்களுக்கு கொடுத்தனுப்ப ஏற்கனவே வாழையிலையிலும் பத்திரிக்கை தாளிலும் பார்சல் செய்யப்பட்டு இருக்கும், அது இல்லாமல், வீட்டிற்கென சில பெரிய பாத்திரங்களில் இன்வென்டரி கன்ட்ரோல் செய்யப்பட்டு இருக்கும்.

எங்கள் சிறிய அத்தை குடும்பத்தினர் ஒவ்வொரு முறையும் ஒரு 1000 சர வெடியை கொண்டு வருவார்கள்... அதோடு சேர்த்து நாமும் நம்முடைய மிளகாய் வெடியின் திரியை கிள்ளி 5 அல்லது 6 வெடிகளை ஒன்றாக சேர்த்து மினி சர வெடியெல்லாம் வெடிப்போம்... நிறைய பட்டாசு வெடிக்க வேண்டும் என எப்போதும் ஆசையாக இருக்கும்... அப்பாவிடம் கேட்டால், காசை கரியாக்காதீங்க.. என்ற பதில் பல ஆண்டு தீபாவளியும் கேட்டிருக்கும்... பள்ளி நாட்கள் முடியும் போதே பட்டாசு மேலிருந்த ஆர்வமும் குறைந்து விட்டது... ஆனால், சென்னை வந்த பிறகு, தீபாவளி அன்று இரவு, மொட்டை மாடியின் மேலே, அல்லது தண்ணீர் தொட்டியின் மேலே படுத்துக்கொண்டு வான வேடிக்கைகளை வேடிக்கை பார்ப்பது, ஒரு அழகான அனுபவம்..

டாலஸில் இருக்கும் போது, அமெரிக்க சுதந்திர நாளின் போது வான வேடிக்கை (அதாவது நிஜமான வானவேடிக்கை) முதல் முறையாக நேரில் பார்த்தேன்... சும்மா கலக்கல்... 20 நிமிடங்களுக்கு தொடர்ந்து வானத்தில் வண்ணக்கோலங்கள்... அதுவாவது பராவாயில்லை... இப்போ ஹவாயில். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் போதும், 10 அல்லது 15 நிமிடங்கள் வானவேடிக்கை.. என்னுடைய அபார்ட்மென்ட் லனாய் (balcony in hawaiian) இல் இருந்தே அழகாக தெரியும்... முதலில் 2 வாரங்கள் வேடிக்கை பார்த்தேன்... இப்போது வெடி சத்தம் கேட்டாலும் .. .அட போடா.. என அசையாமல் இருக்கிறேன்...

ஆனால், மனதிற்கு, 10 ரூபாய் கிடைத்தவுடன் பக்கத்து கடைக்கு சென்று ஏதாவது ஒரு பட்டாசை வாங்கி, எங்கள் வீட்டின் எதிரே அதிக பட்டாசு குப்பை இருக்கிறது என நிரூபித்த காலமே சுகமாக இருக்கிறது...


உறவுகள் கூடவும், உள்ளம் களிக்கவும், உள்ளது சிறக்கவும், உவகை பெறுகவும்... அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...