Friday, June 6, 2008

புன்னகை

மெல்லிய பசுமை குடில்,
தினம் மென்மையாக தெளிக்கப்படும் தண்ணீர்
ஊட்டங்கள் சேர்த்திட உரங்கள்
காய்ந்த இலைகளையும் கத்தரிக்க விரல்கள்..
மொட்டு விட்டு மலரும் வரை இரசித்திட சில விழிகள்...

இவை எதுவுமே நான் அறியவில்லை...
எனது மெல்லிய மலர்களை யாரும் விரும்பவில்லை..
வேலிகாத்தான்... முட்களை ஏந்தி நான்.....

மண் வாசனை தெரிந்த மண்ணிலும் கூட
எருமை மாடு கட்டவும், எரி பொருளாகவும்,
செலவில்லாத சுவராகவும் மட்டுமே வாழ்ந்த நான்....

என்ன வாழ்க்கை இது என்று ஆக்சிஜனை அள்ளி வீசியபோது,

எனதருகே இது வரை வாழ்ந்து,
மாடுகளின் குளம்புகளில், நசுங்கி வீழ்ந்த
சின்ன செடியொன்று சொன்னது...

அண்ணா.... உங்களை போல் பிறந்திருக்க வேண்டும்....

புன்னகைத்தேன்... என் வாழ்க்கை மோசமில்லை...

No comments: