Monday, June 16, 2008

ஹவாய் வாழ்க்கை

இதோ.. ஓடிவிட்டது ஒரு மாதம்... ஹவாய் வந்து, ஹாய்யான வாழ்க்கைதான்...

ஊரை பற்றி...
அழகு.... இயற்கை அன்னை கொட்டி கொடுத்துள்ளாள்...
அதைவிட, இந்த மானுடர் அதை கட்டி காப்பாற்றுகிறார்கள்....


சாலை எங்கும் மலர்கள்... கொன்றை மரம் .. எல்லா வண்ணங்களிலும், மஞ்சள் மட்டுமே நான்கைந்து வகைகளில்...

செம்பருத்தி செடிகள்... சாலை ஒரங்களில்.. நான் பார்த்து இதுவரை இருபது வகைகளாவது...
கழிவு நீர் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாடும்... மீன் பிடிக்காதீர்.. இது அசுத்தமான நீர் என்று ஒரு பலகை... அட சாமி... 5 அடி ஆழத்தில் பளிங்கு தண்ணீர்...

பசுமை மலைகளின் தொடர்... அங்கு டயமண்ட் ஹெட் என்று ஒரு காலத்தில் கோபப்பட்டு இன்று அமைதியாக இருக்கும் எரிமலை குன்று...

மக்களை பற்றி சொல்ல வேண்டும்... போன முறை டெக்சஸ் மாநாட்டில் இருந்த போது, ஆடம்பரம் அள்ளி வீசும்...
இங்கு பொருளாதார நிலை கொஞ்சம் மோசம்தான்...
ஆனால், ஜப்பானிய கலாச்சார தாக்கம்....
வழி சொன்னாலோ, பேருந்தில் இருக்கை தந்தாலோ.
தலை தாழ்த்தி, இதழ் சிரித்து, நன்றி என்னும் போது,
ஒரு மகிழ்ச்சி.....

நான் வாழ்வதோ வைக்கிகியில்...
வானுயர்ந்த ஹோட்டல்கள்...
வகைவகையான உணவு விடுதிகள்....
கடற்கரை ஓரத்தில் களி சேர்க்க காரணிகள்...

தினசரி, பேருந்து பயணம்...
(இதை பற்றி தனியே எழுத வேண்டும், இப்படித்தான் பேருந்து இருக்கவேண்டும்)
தினம் இந்த 2 மணி நேரம்,
வைரமுத்து, வாலி, தாமரை என
எல்லா கவிஞர்களுடனும் என்னை நட்பாட செய்கிறது...

மாலை நடை பயில...
1 மணி நேரம்... கோல்ஃப் கோர்ஸ் தென்னை மரங்கள்
நீரில் ஓடி ஒளியும் மீன்கள்...
மீன் பிடிக்க ஒரு காலில் காத்திருக்கும் பறவை...
அவ்வப்போது தென்படும் வாத்துக்கூட்டம்...

ரோலர் போர்டு ஏறி வித்தை காட்டும் இளைஞர்கள்...
நாய் குட்டியை குழந்தையை போல நடத்தி செல்லும் நண்பர்கள்..
காதலர் கையில் கையை பிணைத்து கடற்கரை செல்லும் பாக்கியவான்கள்...

70 - 80 வயதிலும், வாழ்க்கை துணையோடு,
கையில் தடியோடும், விழியில் புன்னகையோடும்.
ஒருவருக்கொருவர் துணையாக, இணையாக,
மென்நடை நடந்திடும் மெலிந்த பெரியோர்கள்...

கடற்கரை சென்றாலோ,

நடைபாதை முழுதும் வித்தை காட்டும் நண்பர்கள்...
சாயம் பூசி சிலையாக நின்று சில்லரைகள் சேர்ப்பார் சிலர்...
மாயம் செய்து வித்தை செய்து மகிழ்விப்பார் சிலர்..
மின்னல் வேகத்தில் முகத்தை ஓவியமாக்கும் சிலர்..
வண்ண கிளிகள் தோளில் அமர வாடகை கேட்கும் சிலர்..

அலையை பாதையாக்கி, பலகை மேல் நின்றே,
கலையுடன் விளையாடும் பலர்...
கரையின் முனையில், அலையின் நுரையில்,
பாதம் நனைக்கும் பலர்..
காற்றின் மென்மையில், காதலின் வன்மையில்,
காவியம் எழுதும் சிலர்..
நடுவில்.... கல்லின் மேல் அமர்ந்து, கடலலை கண்டு,
கண்ணீரோடும் சிலர்..

என்னுடைய வெறுமையை எல்லாம் வேறாக்கி
என்னை எனக்கு மீண்டும் அறிமுகம் செய்த ஊர் இது...

வாழ்க நீ...
ஒரு ஏக்கம் மட்டும் உண்டு.... என்றேனும் ஒரு நாள்...
என்னுடைய சென்னையும் உன்னை போல் ஆக வேண்டும்...

7 comments:

வேளராசி said...

வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறீர்கள்.அப்படியே எனது பதிவின் பக்கம் வந்து பார்க்கவும்.velarasi.blogspot.com

Natty said...

நன்றி வேளராசி...
வருகைக்கும், உங்களுடைய பயனுள்ள பதிவுகளுக்கும்... அதென்ன பெயர் புதுமை.... புனை பெயரோ?

PK said...

ஏன்ங்க , என்னங்க எனக்கு உங்களை போல ரசனை இருக்கு! என் வாழ்கையில் முதன் முதலில் நான் உலகத்தை பார்ப்பது போலவே இன்னொருவர்! ஆச்சர்யம் தான்.. ! உங்களின் கவிதை நடை மிகவும் அழகு! உங்களுக்கு ஒண்ணு சொல்லவா? என் writing style உங்களை போலவே (கொஞ்சமாவது !) இருக்குன்னு எனக்கு தோணுது. எனக்கு சந்தோஷமாக இருக்கு! :D

புனித்

மங்களூர் சிவா said...

/
ஒரு ஏக்கம் மட்டும் உண்டு.... என்றேனும் ஒரு நாள்...
என்னுடைய சென்னையும் உன்னை போல் ஆக வேண்டும்...
/

இதுக்கு பேரு ஏக்கம் இல்லை பேராசை இல்லைனா அதுக்கும் மேல எதாவது ஒன்னு.

:)))

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்!

Natty said...

சென்னைக்கு என்ன தல குறைச்சல்..... chennai is too good, but in patches :( நிழற்சாலைகள் ஆகட்டும், நட்பாடும் பொதுமக்கள் ஆகட்டும், அழகான கடற்கரையாகட்டும், உணவு விடுதிகள், கோயில்கள்... கலை இலக்கிய நிகழ்வுகள்... கவிதை வட்டம், எல்லாமே அழகுதான்.... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இன்னும் ஒரு 10 வருடம், ஹவாய் என்னங்க.... எந்த சிட்டியும் கிட்ட நெருங்க முடியாத மாதிரி வளர்ந்திடும்... ஐ லவ் சென்னை ;)

சரண் said...

கொடுத்துவெச்ச மகராசன் ஐய்யா நீங்க...!!! ஹவாய் மாவி தீவுக்கு ஒரு வாரம் வந்து தங்கி இருக்கோம். வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாட்கள் அவை!!!

எப்படிங்க உங்களுக்கு அங்க வேல கிடச்சுது? எங்களுக்கும் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க...